இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளை முதல் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ள அதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படுவதுடன், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். கடல் பிராந்தியங்களை பொறுத்தவரையில், மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இக்கடல் பிராந்தியங்களில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து வட திசையை நோக்கி மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக்கூடும் என்பதால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் அக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
