பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, மெட்டா (Meta) நிறுவனம் “Strict Account Settings” எனும் புதிய உயர்தர பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்கள் இந்த அம்சத்தை இயக்கியவுடன் செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறது.
இதன் முக்கிய அம்சமாக, முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் (Attachments) மற்றும் மீடியாக்கள் தானாகவே தடுக்கப்படுவதுடன், தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அமைதியாக்கப்படும் (Silencing calls). மேலும், ஊடுருவிகளால் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் லிங்க் ப்ரிவியூ (Link previews) வசதி செயலிழக்கச் செய்யப்பட்டு, இணைய முகவரிகளின் மாதிரிக்காட்சிகள் முடக்கப்படுவதால் மால்வேர் (Malware) போன்ற ஆபத்தான தாக்குதல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆப்பிளின் “Lockdown Mode” மற்றும் கூகுளின் “Advanced Protection Mode” ஆகியவற்றை ஒத்ததாக இருக்கும் இந்த வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள End-to-End Encryption முறைக்கு மேலதிகமாக ஒரு கூடுதல் கவசமாகச் செயல்படும் என்றும், மிகவும் மேம்பட்ட கண்காணிப்பு அல்லது ஊடுருவும் முயற்சிகளை எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சிறிய குழுவினருக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
