பருத்தித்துறை பொலிஸாரின் அதிரடியான நடவடிக்கையின் மூலம் 100 கிலோவுகக்கு அதிக எடையுடைய சுமார் 3 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொர்பில் பருத்தித்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க அவர்கள் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் போதை ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது போதைப்பொருள் மீட்பு சம்பவமாக இது பதிவாகியிருக்கின்றது.
சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பருத்தித்துறை பொலிஸாரினால் நேற்று (01) சனிக்கிழமை அதிகாலை சுப்பர்மடம் கடற்கரையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகள் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இருந்த போதும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் படகுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடத்தலின்போது துணைபுரிந்த மேலும் ஒரு படகு அடையாளம் காணப்பட்டு பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு படகு வெளி இணைப்பு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசேட பிரிவின் தகவலுக்கு அமைவாக நடத்திய தேடுதலின் போது பருத்தித்துறை அவ்வொல்லை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பைகளில் காணப்பட்ட 46 கஞ்சா பொதிகள் மீடட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நால்வரையும் சான்று பொருட்களையும் இன்றையதினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
