எதிர்வரும் டி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி பங்களாதேஷ் இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானும் விலகப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், பாகிஸ்தான் அரசாங்கம் பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குழு ‘A’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் 2 புள்ளிகளை இழக்க நேரிடும்.
இதனால், அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பது குறித்துப் பேசிய அணித்தலைவர் சல்மான் ஆகா, “இது எங்கள் முடிவல்ல; அரசின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். போட்டிகளில் வெல்வதே எங்கள் வேலை,” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அரையிறுதி அல்லது இறுதியில் மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ள நேரிட்டால் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.
கடந்த 2024 உலகக் கிண்ணத்தில் அமெரிக்காவிடம் தோற்று வெளியேறிய கசப்பான அனுபவத்திலிருந்து மீள பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் மற்றும் துடுப்பாட்ட வரிசையில் ஏற்படும் சரிவுகள் அந்த அணிக்குத் தொடர் சவாலாக உள்ளன.
குறிப்பாக, அனுபவ வீரர் மொஹமட் ரிஸ்வான் நீக்கப்பட்டு, உஸ்மான் கான் போன்ற மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொஹமட் நவாஸ், ஷதாப் கான், சாய்ம் அயூப் ஆகிய சகலதுறை வீரர்களுடன் அப்ரார் அஹமட் மற்றும் உஸ்மான் தாரிக் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலைமையிலான வேகப்பந்து வீச்சு வலுவாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவை 2-1 என வீழ்த்தியது மற்றும் அவுஸ்திரேலியாவை 3-0 என வெள்ளையடிப்பு செய்தது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்தியாவுடனான போட்டியை இழக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி தவறுகளுக்கு இடமில்லாமல் விளையாடினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
