2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், மினுவாங்கொடை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புவியியல் பரீட்சைக்கு தோற்றிய 14 தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு பகுதி ஒன்று வினாத்தாள் மற்றும் வரைபடங்கள் வழங்கப்படாதமை, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது.
பரீட்சை மேற்பார்வையாளரின் கவனக்குறைவு மற்றும் தமிழ் மொழி அறிவின்மையே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் இழந்த 50 புள்ளிகளுக்குப் பதிலாக பகுதி இரண்டில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளருக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மாணவர்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களையே பரீட்சை மேற்பார்வையாளர்களாக நியமிக்க முறையான அமைப்பு உருவாக்க வேண்டும் எனவும், பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் மாணவர்களின் தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
